Tuesday, 19 August 2025

புரட்சி தலைவர் சர்தார் பாலபாரதி செல்லதுரை தேவர்

------------------------------------------- ✊ சுதந்திரப் போராட்ட வீரர் புரட்சி தலைவர் சர்தார் பாலபாரதி செல்லதுரை தேவர் – திருவாடானைச் சிறை உடைப்பின் மாவீரன் ------------------------------------------ பிறப்பு மற்றும் ஆரம்பம் பிறப்பு: 23 செப்டம்பர் 1908 பிறந்த ஊர் : அன்றைய மதராஸ் மாகாணம் ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டம், முப்பையூர் அருகிலுள்ள விளாங்காட்டூர் கிராமம். விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், சிறுவயதிலிருந்தே நாட்டுப்பற்றும் தன்னலமற்ற போராட்ட மனப்பான்மையும் கொண்டவராக விளங்கினார். ------------------------------------------- வரலாற்றுப் பின்னணி – 1942 1942 ஆகஸ்ட் 8 அன்று காந்திஜி வழங்கிய “வெள்ளையனே வெளியேறு” (Quit India) தீர்மானம், இந்தியா முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களிலும் மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் சுதந்திரத்திற்காக சாலைகளில் இறங்கினர். தேவகோட்டை–திருவாடானை பிரதேசங்களும் அதே போராட்டத் தீயில் எரிந்தன. ------------------------------------------- திருவாடானைச் சிறை உடைப்பு – 1942 ஆகஸ்ட் 9, 1942 நள்ளிரவு: தேவகோட்டையில் கைது செய்யப்பட்ட சின்ன அண்ணாமலை, 22 மைல் தூரத்தில் உள்ள திருவாடானை சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார். கைது செய்த செய்தி பரவியதும் தேவகோட்டை நகரம் கலகத்துடன் பொங்கி எழுந்தது; பேருந்துகள் எரிக்கப்பட்டன; அலுவலகங்கள் தாக்கப்பட்டன; பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் திருவாடானை நோக்கிச் சென்றனர். 20,000க்கும் மேற்பட்டோர் சிறை முன் திரண்டனர். செல்லதுரை தேவரின் தலைமை அந்த மகா கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் புரட்சி தலைவர் சர்தார் பாலபாரதி செல்லதுரை தேவர். அவர் மக்களை ஒழுங்குபடுத்தி சிறை முன் அமரவைத்தார். சிறை காவலர்கள், பெரும் மக்கள் கூட்டத்தை கண்டு அச்சமடைந்து சாவியை ஒப்படைக்க முன்வந்தனர். ஆனால் செல்லதுரை தேவர் உறுதியுடன், “இது சாதாரண விடுதலை அல்ல; மக்களின் சக்தியால் நடத்தப்படும் வரலாற்றுப் புரட்சி. சாவியை ஏற்காமல் நாமே கதவை உடைக்க வேண்டும்” என்றார். இதையே சின்ன அண்ணாமலையிடம் தெரிவித்து, அவரது ஒப்புதலுக்குப் பின் மக்கள் கதவை உடைத்தனர். அந்த பட்டப்பகல் சிறை உடைப்பு இந்திய சுதந்திர வரலாற்றில் முதல் மக்கள் நடத்தும் சிறை உடைப்பு எனப் பொற்குறியீடாகப் பதிந்தது. ------------------------------------------- துப்பாக்கிச் சூடு மற்றும் பலி கைதிகள் விடுதலை செய்யப்பட்டவுடன் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சின்ன அண்ணாமலை இடது கையில் குண்டு தாக்கம் அடைந்தார்; செல்லதுரை தேவர் மக்களுடன் துணிந்து நின்றார். சுமார் 50 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இந்தக் குருதி பலியோடு சுதந்திரத் தீ இன்னும் வலுப்பெற்றது. ------------------------------------------- கைது, தலைமறைவு மற்றும் சிறைவாசம் சம்பவத்திற்குப் பின் செல்லதுரை தேவர் மற்றும் பிற போராளிகள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. பின்னர் சில ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் சதி திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்தினார. காவல் துறையின் கண்காணிப்பை மீறி, மக்கள் மத்தியில் விடுதலை உணர்வை பரப்பத் தொடர்ந்து செயல்பட்டார். ------------------------------------------- விடுதலைக்குப் பின் அரசியல் பணி 1947-இல் சுதந்திரம் கிடைத்த பின், செல்லதுரை தேவர் மக்கள் மத்தியில் மீண்டும் வெளிப்பட்டார். 1952 இல் நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தலில், திருவாடானைத் தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் சுயேச்சையாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்ற போராளி, அரசியலிலும் தன் பாதையைப் பதித்தார். ------------------------------------------ மறைவு 06 நவம்பர் 1975 அன்று செல்லதுரை தேவர் மறைந்தார். அவர் வாழ்ந்த பாதை, சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலும் அழியாத தடம் பதித்தது. ------------------------------------------- உரிய அங்கீகாரம் இல்லாமை – ஒரு வருத்தம் பெரும் புரட்சி நிகழ்வை வழிநடத்திய சர்தார் பாலபாரதி செல்லதுரை தேவர் போன்ற மாவீரனுக்கு இன்று வரை உரிய அங்கீகாரம் வழங்கப்படாதது வருத்தம் தருகிறது. சுதந்திரத்திற்கு பின் வந்த சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த மன்னிர்காணவர்களாய் இல்லாததால், திருவாடானை பேருந்து நிலையத்திற்கு கூட அவர் பெயரை வைக்க முடியவில்லை. ஒரு மணிமண்டபமோ, சிலையோ, அல்லது அவரது பெயரில் அரசு கல்லூரியோ கூட இல்லை என்பது சமூகத்தின் மறப்பை வெளிப்படுத்துகிறது. ------------------------------------------ நிறைவுரை புரட்சி தலைவர் சர்தார் பாலபாரதி செல்லதுரை தேவர் – சுதந்திரப் போராட்ட வீரர், மக்களின் தலைவன், அரசியல் முன்னோடி. 1942 இல் நடந்த திருவாடானைச் சிறை உடைப்பு அவரது பெயரை இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அழியாத அடையாளமாகப் பதித்துள்ளது. அவர் மக்கள் மத்தியில் உருவாக்கிய வீர உணர்வு இன்னும் தலைமுறைகளைத் தூண்டுகிறது. இன்னும் அவர் நினைவாக உரிய அங்கீகாரம், நினைவுச் சின்னம், கல்வி நிறுவனம் ஒன்று உருவாகுவது தான் நம் சமூகத்தின் கடமை.

Saturday, 7 May 2016

வெண்ணிக் காலாடி என்பவர் பூலித்தேவன் படையின் முக்கியத் தளபதியாக இருந்தவர்

வெண்ணிக்   காலாடி என்பவர் பூலித்தேவன் படையின் முக்கியத் தளபதியாக இருந்தவர்

 பூலித் தேவன் சிந்தும், காலாடியின் புகழை பாடுகிறது
கடமை வீரனப்பா காலாடி வீரனப்பா
சூராதி சூரனப்பா..சூழ்ச்சியில் வல்லவனப்பா
தாயகம் காத்தே தரணி புகழடைந்தானப்பா
தார்வேந்தன் பூலி பட்டயம் பெற்றானப்பா."
பார்துலங்க பூலிமன்னன் பேர்துலங்க -வெண்ணி
பாய்ந்தோடிச் சண்டைகள் போட்டானே
பரங்கியர் தலைகளை வெட்டியே காலாடி
பாங்காய் குவித்திட்டான் மலைபோலே…
எத்தனை பட்டாளம் வெட்டினானடா- வெண்ணியை
எதிர்க்கவும் ஒரு ஆள்கூட இல்லையடா
செங்குருதி நனைத்து பூலித்தேவன் வண்ணச்
சீர்மிகு மேனியெல்லாம் கொப்பளிக்க…
காலாடி உயிருக்கோர் காலன் வந்திட்டான்
கால் நொடியில் காற்றாய் பறந்தானே…
பழிகள் பாவங்கள் வந்ததென்றெனக்கூறி
பார்வேந்தன் பூலித்தேவன் கதறியழ … (பூலித்தேவன் சிந்து)

Sunday, 13 December 2015

சிவகிரி ஜமீனின் தோற்றம்:

 சிவகிரி ஜமீனின் தோற்றம்:



சிவகிரி ஜமீனின் மூ
தாதையர்களாக புரசாம்பட்டு வன்னியாடியும், தச கண்ட வன்னியனாரும் பழைய மறவர் சீமையான இராமநாதபுரம் சீமையில் சிவகங்கை பகுதியில் உள்ள் திருப்புவனம் பகுதியே பூர்வீகமாகும். இதில் புரசாம்பட்டு வன்னியடி பாண்டிய மன்னனிடம் தளபதியாக இருந்துள்ளர். இவர் சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திரனை வெல்ல காரனமாக இருந்ததால் 72 ஊர்களின் திசை காவலனாக் வழங்கினார் .இவரதி பூர்வீகம் தொண்டை மண்டலமோ(அ) காவிரியின் வடகரையோ கிடையாது. இதன் பின் தன் சுற்றத்தாரை அழைத்து சென்று எழாயிரம் பன்னை,அழகபுரி போன்ற பகுதியில் குடியேறினர்.இவரும் சேத்துர் ஜமீனும் சம காலதவர்கள். ஆதவது 13-நூற்றண்டு.

வன்னியர்-பட்டம் பற்றிய சில தெளிவுகள்:

வன்னியர் எனற பெயரின் விளக்கதில்
வன்னி - கிளி,தீ, குதிரை, மர வகை,தலைவன், சிங்கம் என்று பல பொருள் தருகிறது எனவே இவை அனைதும் ஒரு சாதிக்கு பொருந்தும் என எற்கலாகது.
வன்னியன் என்னும் சொல்லின் பொருள் வன்மை என்ற வேர் சொல்லின் ஊருவனது என்பதே உன்மை.
தின்னிய நெஞ்சம் உள்ளவன் தின்னியன். வன்மையுடை நெஞ்சம் உள்ளவன் வன்னியன்.

1784 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் அரண்மனையின் முகப்புத் தோற்றம்

1784 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் அரண்மனையின் முகப்புத் தோற்றம் :



சேதுபதி மாமன்னர்களின் கொடைகள்

ராமநாதபுரம் சேதுபதி மாமன்னர்களின் கொடைகள் :


1) குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி, பிற மதத்தினரையும் மதித்து 1734ல் ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசலுக்கு ‘கிழவனேரி ‘ எனும் ஊரைத் தானம் செய்தார்.

2) 1742ல் முத்துக்குமார விசய ரகுநாத சேதுபதி ஏர்வாடி பள்ளிவாசலுக்கும், ராமேஸ்வரத்தில் உள்ள ஆபில்,காபில் தர்காவுக்கும் நிலக்கொடைகள் அளித்துள்ளார்.

3) கடைசி சேதுபதியான முத்துராமலிங்கம், முத்துப்பேட்டை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு 1781ல் ‘தெஞ்சியேந்தல் ‘ எனும் ஊரைக் கொடையாகத்தந்துள்ளார்.


மடங்கள் பெற்ற கொடை:

சேதுபதி மன்னர்கள் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு கொடையளித்த ஊர்களும், நிலங்களும் எக்கச்சக்கம்.


1) கிபி 1661 ஆம் ஆண்டில் திருமலை சேதுபதி ரகுநாதத்தேவர், ‘மதுரை திருமலை நாயக்கரின் புண்ணியத்திற்கும், தம் தந்தை தளவாய் சேதுபதி காத்த தேவரின் புண்ணியத்திற்கும், தமது பெற்றோர்களின் பற்றகத்திற்குப் புண்ணியம் ஏற்படவும், திருவாவடுதுறை சைவ மடத்தின் கீழுள்ள திருப்பெருந்துறைக்கோவிலின் உஷாக்கால பூஜைக்காக, ஆதீனத்திற்கு வெள்ளாம்பற்றுச் சீமையிலிருந்து, முத்து நாட்டுச்சிமை வரை ஏராளமான ஊர்களைக் கொடையளித்தார். இதே ஆதீனத்திற்கு 1668ல் பெருங்காடு எனும் ஊரையும், 1673ல் உச்சிக்கால பூஜைக்கு ‘தச்ச மல்லி ‘ எனும் ஊரையும் இறையிலி ஆக்கி உள்ளார்.

2) கிழவன் சேதுபதி 1678ல் ஆதீனத்திற்கு உச்சிக்கால பூஜைக்காக ‘புல்லுக்குடி ஏந்தல் ‘ ஊரைத்தானமாக அளித்தார்.


3) 1680ல் சேதுபதி ரகு நாதத்தேவர் அவர்கள், திருமலை சேதுபதி காத்ததேவர் புண்ணியத்திற்காகவும், சாத்தக்காள் ஆயி, தம்பியாயி ஆகியோர் புண்ணியத்திற்காகவும், ‘நரிக்குடி ‘ உள்ளிட்ட ஐந்து கிராமங்களை வரியின்றி அனுபவிக்கச் செய்தார்.
4) பொசுக்குடி செப்பேடு (காலம்: 1731) குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதியால் வெட்டப்பட்டது. இது திருவாவடுதுறை ஆதீனத்திற்கு பொசுக்குடி எனும் ஊரை ஈந்த செயலை ‘மடப்புறம் ‘ என்றது. (இதன்மூலம் மடப்புறம் என்பது சைவ மடத்திற்கு அளிக்கப்பட்ட தானம் எனலாம். மதுரையை அடுத்த மடப்புரம் எனும் ஊரும் இத்தகைய சிறப்பைப் பெற்றிருக்கலாம்). இதே சேதுபதி 1733ல் வணிகர்கள் இவ்வாதீனத்திற்கு ‘மகமை ‘ தரச்சொல்லி திருப்பொற்கோட்டை செப்பேட்டில் சொல்லி உள்ளார்.

5) முத்துராமலிங்க சேதுபதி 1782ல் ஆதீனத்தின் ஆவுடையார் கோவில் உச்சிக்காலபூஜைக்கு சில நிலங்களையும் (ரெவ்விரண்டு குறுக்கம் நன்செய் உட்பட), தோப்புகளையும் ஆண்டனுபவிக்கச் செய்தார். வள்ளைக்குளம் எனும் ஊரினை திருவாவடுதுறை மகேசுவர பூசைக்குக் கொடையாகத் தந்தார்.
மேலும் 1706ல் சேதுபதி காத்த தேவர் கால செப்பேட்டில், அரசு ஊழியரின் ஒரு நாள் சம்பளம், மாதாமாதம், திருப்பூந்துறைக்கோவிலுக்குப் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆதீன நிலங்களில் உழவர் நிலை:

சேதுபதி மன்னர்கள் மாதிரியான குறுநில மன்னர்களின் ‘புண்ணியம் / சொர்க்கம் ‘ ஆசையாலேயே இத்தானங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால் வளம் பெற்ற ஆதீனங்கள் அந்நிலங்களை வைத்துக்கொண்டு என்ன செய்தனர் ?


குவிந்து கிடந்த நன்செய்களில் வேலை செய்த விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தார்கள். சூரியன் எழுமுன் வயலில் இறங்கி, மறைந்தபிறகே வயலைவிட்டு வெளியேறும்படி மக்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. ஆதினங்களின் காறுபார்கள், அம்மக்களுக்குக் கள்ள மரக்காலில் கூலி அளந்தார்கள். எதிர்ப்பேச்சுப் பேசின தலித்களுக்கு சவுக்கடியும், சாணிப்பாலும் இருந்தன.


பருவ மழை பொய்த்தாலும் மேல்வாரம், கீழ்வாரம் என்று கடுமையான வரிகளைப்போட்டு, குத்தகை பாக்கி அளக்காத கூலி விவசாயிகளைக் கொன்று, புதைத்த இடத்தில் தென்னங்கன்றை நட்டு வைத்த மடங்களின் ‘சிவத்தொண்டை ‘ இன்றும் தஞ்சை, புதுக்கோட்டை மக்கள் வாய்வழிக்கதைகளாகப் பேசிவருவது கண்கூடு.


திருவாவடுதுறை ஆதீன மடத்து நிலங்களில் விதைத்துப் பயிரிட்டு விளைவித்துக் கொடுப்பது சாதாரண மக்கள். அவர்களுக்கு ஏதோ ஒரு பகுதிதான் நெல் கிடைக்கும். மடத்து நிலங்களில்தான் சிறுவிவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் குடியிருப்பார்கள். பயிரிடும் நிலத்தை எந்த சமயத்தில் வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்கொள்வார்கள் ‘ என இம்மடத்தின் சுரண்டலை நல்லகண்ணு தனது பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.


1930, 40 களில் பொது உடைமை இயக்கம் எழுந்து நின்று இம்மடாதிபதிகளின் உழைப்புச் சுரண்டலை எதிர்த்துப்போராட வேண்டி இருந்தது.

ஏராளமாய்ப் பெருகிய சொத்தை அனுபவிக்க எப்போதுமே பெரிய மடாதிபதியும், சின்ன மடாதிபதியும் ஒருவரை ஒருவர் அழிக்கத்திட்டமிட்டு (உதாரணமாக, சமீபத்தில் திருவாவடுதுறை சின்ன ஆதீனம், பெரிய ஆதீனத்தைக் கொல்ல முயன்ற விச ஊசி வழக்கு) சைவத்திற்குப் புறம்பான பல வேலைகளை செய்தார்கள்.


அந்தணருக்கு செய்த தானங்கள்:


நிலங்களைப் பெருவாரியாகத் தானம் தர மறவர் சீமை ஒன்றும் முகலாய சாம்ராஜ்யம் மாதிரிப் பரந்த நாடும் அன்று. பொன் விளையும் பூமியும் அல்லதான். பெரும்பாலும் வானம் பார்த்த மானாவரி நிலங்களையே மறவர் சீமை கொண்டிருந்தது.

அந்தணர்களுக்கு இச்சேதுபதிகள் அளித்த கொடைகள் பின்வருமாறு:


1)கெளண்டின்ய கோத்திரத்து ஆபஸ்தம்ப ஸூத்ரத்து செவிய்யம் ராமய்யன் புத்ரன் அஹோபாலய்யனுக்கு, திருமலை தளவாய் சேதுபதி காத்த தேவர் 25/1/1658ல் காளையார் கோவில் சீமையில் ஆனையேறி வயல், சூரநேம்பல், கீளைச்சூரநேம்பல், மாவூரணி, திருப்பராதியான் வூரணி, பெரிய நேந்தல் ஆகிய ஊர்களை புத்ர, பெளத்ர பாரம்பரியமாக சந்திராதித்திய சந்திரப்பிரவேசமாக சறுவ மான்னியமாக ஆண்டு அனுபவித்துக் கொள்ளச் செய்தார்.


2)1684ல் சுந்தரபாண்டியன் பட்டணத்துக்குள் உள்ள அக்ரகாரம், மடம், ஏகாம்பர நாதர் கோவில் பூசைக்காக எட்டு கிராமங்கள் – புல்லூரும், மருதூரும் உள்ளிட்ட- அக்ரகாரத்துக்காக வழங்கப்பட்டன.

3)ரகுநாத சேதுபதியால், 13-1-1682ல் முருகப்பன் மட தர்மத்துக்கும், அக்ரகாரத்துக்கும் கொடையாகத் திருப்பொற்கோட்டை, பகையனி, பிராந்தனி ஆகிய ஊர்கள் கொடையளிக்கப்பட்டன.


4) 1709ல் கிழவன் சேதுபதியின் 47 மனைவியரில் அரசியான காதலி நாச்சியார், குமரண்டூர் வீரமநல்லூரில் இருந்த வெங்கடேசுவரய்யன் மகன் சங்கர நாராயணய்யனுக்கு தேர்போகி நாட்டு களத்தூரின் 55 சதவீத நிலத்தை இறையிலியாகத் தந்தார்.


5) விசய ரகுநாத சேதுபதி, 1719ல் காக்குடி, கணபதியேந்தல் எனும் 2 ஊர்களை கற்றறிந்த அந்தணருக்குத் தானம் செய்தார்.


6) முத்து விசய ரகுநாத சேதுபதி 1722ல் காஸ்யப கோத்திரம் ஆபஸ்தம்ப சூத்திரத்தைச் சேர்ந்த யசுர்வேதம் தாதாசிவன் என்பார் மகன் ரகுநாதக்குருக்கள் எனும் அந்தணருக்கு ‘பால்குளம் ‘ எனும் ஊரைக் கொடையளித்தார்.


7)சிவகங்கை பிரதானி தாண்டவராயன் தனது தர்மத்தின்பொருட்டு, 1727ல் சங்கரய்யர் பேரன் வேங்கிட கிருட்டிண அய்யரிடத்தில், சேதுமூலத்தில் ஆதிசேது நவ பாஷாணத்தின் கிழக்கே தோணித்துறை சத்திரக்கிராமம் தேர்போகித்துறையில் நிலதானம் அளித்து, அக்கிரகாரம் கட்டிக்கொள்ள அனுமதி தந்தார்.


8)1731ல் குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி, கற்றறிந்த அந்தணர்கள் 24 பேருக்கு ராமநாதபுரம், பாலசுப்பிரமணியர் சந்நிதியில் அக்கிரகாரம் அளித்துள்ளார்.


9) 1737ல் காசியப கோத்ரம், ஆசிவிலயன சூத்திரம் ரிக்வேதம் பயின்ற கலாநிதி கோனய்யர் மகன் ராமனய்யருக்கு கோவிந்த ராச சமுத்திரம் எனும் முதலூரை, ரகுநாத சேதுபதியின் மருமகன் தானம் செய்தார்.


10) முத்து விசய ரகுநாத சேதுபதி 1760ல் உத்திரகோச மங்கை மங்களேஸ்வர சுவாமி கோவில் ஸ்தானிகரான ராமலிங்க குருக்கள் மகன் மங்களேஸ்வரக் குருக்களுக்கு கருக்காத்தி கிராமம் கொடையளிக்கப்பட்டது.
செப்பேடுகளை வாசிக்க, வாசிக்க, தானமாய்த் தந்த ஊர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


முத்து விசய ரகுநாத சேதுபதி சூரிய கிரகணத்துக்காக, 
1762ல் சின்ன நாட்டான், பெரிய நாட்டான் ஊர்களைக் கற்றறிந்த அந்தணருக்குத் தந்தார்.

பரத்வாஜ கோத்திரம் ஆவஸ்தம்ப சூத்திரம் யஜூர் வேதம் வல்ல அவதானம் செய்ய வல்ல சேஷ அவதானியின் மகன் சந்திரசேகர அவதானிக்கு 1763ல் அரியக்குடியை தானம் செய்தார்.


தண்ணீர்ப்பந்தல், அன்னதானமடம், அக்ரகாரம் ஆகியன வேதாளை கிராமத்தில் இருந்தன. இத்தர்மங்கள் தொடர, ரெங்கநாதபுரம் வெங்கிட நாராயண அய்யங்காருக்கு ‘அனிச்சகுடி ‘ 1768ல் முத்துராமலிங்க சேதுபதியால் வழங்கப்பட்டது. 


இச்சேதுபதிதாம் 1772ல் கப்பம் கட்ட முடியாத காரணத்தால் நவாப் வாலாஜா முகம்மது அலியால் திருச்சியில் சிறை வைக்கப்பட்டு இருந்தார்,கிட்டத்தட்ட 10 ஆண்டுகள். வரிகட்ட முடியாமைக்கு கம்பெனி எதிர்ப்பு ஒரு காரணமானாலும், தான தருமங்களால், அரசின் வருவாயும் குறுகிக்கொண்டே போனதும் முக்கியக் காரணமாய் இருந்தது.

1781ல் சிறை மீண்டு வந்து, அமாவாசை புண்ணிய நாளில், அனுமனேரிக்கிராமத்தை கற்றறிந்த அந்தணர் 10 பேருக்கு அளித்தார். 1782ல் அய்யாசாமிக்குருக்களுக்கு சொக்கானை, மத்திவயல் ஊர்களையும், திருப்புல்லாணியில் உள்ள புருசோத்தம பண்டிதர் சத்திரத்தில் பிராமணருக்கு அன்னமிட கழுநீர் மங்கலம் ஊரையும்,1782ல் யஜூர் வேதம் வல்ல ராமசிவன் மகன் சுப்பிரமணிய அய்யருக்கு குளப்பட்டிக்கிராமத்தின் பாதியையும், 1783ல் யஜூர் வேதம் கற்ற கிருஷ்ணய்யங்காருக்கு செப்பேடுகொண்டான் எனும் ஊரையும் தந்தார்.

சிங்கம்பட்டி

சிங்கம்பட்டி , திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறிய ஊர் ஆகும். முன்பு இது சுமார் 340 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்த ஒரு பெரிய ராஜியமாகத் திகழ்ந்தது. இந்த ராஜியத்தை 32 மன்னர்கள் ஆட்சி செய்தனர். இந்த ராஜியம் முதலில் தனித்து இயங்கிக் கொண்டிருந்தது.1503 -ல் நாயக்கர்களால் அது ஒரு பாளையமாக மாறிவிட்டது . பின்பு 1802 - ல் ஆங்கிலேயரால் ஜமீனாக மாற்றப்பட்டது .

சிங்கம்பட்டி ஊரின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் (சுமார் 5 ஏக்கர்) அமைக்கபட்டுள்ளது, சிங்கம்பட்டி அரண்மனை. அதன் ஒரு பகுதி கலைப் பொருள்கள் காப்பகமாக உள்ளது. இது 200 வயதான பழமைவாய்ந்த அருங்காட்சியகம் ஆகும்



சிங்கம்பட்டியின் வரலாறு


சிங்கம்பட்டியின் வரலாறு :


கி.பி. 1100-ம் ஆண்டு சிங்கம்பட்டி ஜமீன் உதயம் ஆனது. சிற்றரசேயாயினும் தமிழ் வித்வான்கள், கவிஞர்களையும் போற்றிப் பரந்த பெருமை கொண்ட ஜமீன். ராமநாதபுரம் மாவட்டத்தில் திருஉத்திரகோசமங்கையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கலைகள் செழித்தோங்கிய காலம் அது.

மதுரை நகரில் அப்போது பாண்டியர் மன்னராட்சி புரிந்தனர். அரசக் குடும்பத்தில் சிற்றப்பனுக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட பூசலால் மகன் குலசேகரபாண்டியன் சோழ மன்னனிடம் தஞ்சம் புகுந்தான். பாண்டியர் வம்சத்தில் வந்த சிற்றப்பன் ஈழ நாட்டரசனிடம் அபயம் புகுந்தான். இலங்கேசன் உதவியால் பராக்கிரம பாண்டியன் ஈழவேந்தன் படை துணையுடன் ராமநாதபுரம் ராஜ்யத்தின் மீது
படையெடுத்து ஆக்கிரமித்தான்.

இந்த பேராபத்தை உணர்ந்த குலசேகரபாண்டியன் சோழர் படை உதவியுடன் எதிர்த்துப் போரிட்டு, எதிரிகளை அனுராதபுரம் வரை புறமுதுகு காட்டி ஓட விரட்டியடித்தான். இவ்வாறு ஏற்பட்ட அரசியல் குரோதத்தால் வரலாற்றில் மாறுதல் ஏற்பட்டது. பாண்டியன் ஆட்சியின் கீழ் இருந்த சேதுபதிகளின் ஆதிக்கம் வீழ்ச்சியடைந்தது. சோழ மன்னன் வம்சம் ஆளத் தலைப்பட்டது.

இக்காலக்கட்டத்தில் பெருநில பிரபு ஆபதோதாரணத் தேவர் தன்னைப் பின் தொடர்ந்த பிரஜைகளோடு வெளியேறினார்.

அவர்கள் கடலோர நெடுஞ்சாலை வழியாக கன்னியா குமரி வந்தடைந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பரப்பில் இங்கும் அங்குமாக குடியேறத் தொடங்கினர். இக்காலத்தில் அந்த மறவர் குலத்தைச் சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி முதல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் ஜமீன் நிலப்பாகம் வரை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தின் நிலப்பரப்பை ஆண்டு வந்துள்ளனர். ஆபதோதாரணத் தேவர் கடைசியாக சேரன்மகாதேவி அருகேயுள்ள தேவநல்லூர் கிராமத்தில் சகாக்களுடன் குடியேறினார்.

ஆபதோதாரணத் தேவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அவரது பேத்தி அல்லது கொள்ளுபேத்தி தேவநல்லூரை விட்டு வெளியேறி சிங்கம்பட்டி வந்தார். அப்போது சிங்கம்பட்டி வல்லையர் இனத்தாரால் ஆளப்பட்டு வந்தது. அப்போதிருந்த வல்லையர் மன்னன் அவளது துயரச் செய்தி கேட்டு தன் குடும்பத்தில் தங்கும்படி கேட்டுக் கொண்டார். இதற்கிடையே அவள் ஆண்மகனை பெற்றெடுத்தாள். வல்லைய மன்னனுக்கு ஆண் வாரிசு இல்லாததால் அவர் இறக்கும் தறுவாயில் தான் வளர்த்து வந்த அந்த இளைஞனையே தனது அரியணைக்கு வாரிசாக நியமனம் செய்தார். அந்த இளைஞன்தான் பிரீதிபாலு.

பிரீதிபாலு ஆபதோதாரணத்தேவரின் 5-வது தலைமுறை. இதனால், வல்லையர் தலைவனின் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. அரசரின் உறவினர்கள் பிரீதிபாலுவை எதிர்த்தனர். அன்னியர் ஒருவன் அரியணை ஏறுவதைத் தடுத்தனர். இதனால், பிரீதிபாலு வெளியேறி தேவநல்லூரில் தன் தந்தை பரம்பரையை தழுவினான். அவர்கள் உதவியுடன் சிங்கம்பட்டி மீது படையெடுத்த பிரீதிபாலு அரியணை ஏறி ஆட்சியைக் கைப்பற்றினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உக்கிரன்கோட்டையை தலைநகராகக் கொண்ட பாண்டிய ராஜ்யத்தின் தென் பகுதியை கலிதப்பாண்டியன் ஆண்டு வந்தார். அந்த சமயம் தன் மீது படை எடுத்த கன்னட ராஜ்ய அரசன் மீது தாக்குதல் நடத்த கலிதப்பாண்டியன் பிரீதிபாலுக்கு கட்டளையிட்டான். கன்னட ராஜ்ய சர்தாரை தோற்கடித்து வெற்றிவாகை சூடிய பிரீதிபாலுக்கு கலிதப்பாண்டியன் சில நிலபாகங்களையும், ஆஸ்திகளையும் வழங்கினான். தான் சந்தித்த இடையூறுகளை முறியடித்து வல்லையர் தலைவனின் சிம்மாசனம் ஏறினார் பிரீதிபாலு.

காலப்போக்கில் விஜயநகர சாம்ராஜ்யம் நலிவடைந்த பின் அங்கிருந்து மதுரைக்கு வைஸ்ராயாக வந்த நாகமநாயக்கரும், அவரது புதல்வர் விஸ்வநாத நாயக்கரும் தாங்கள்தான் மதுரைக்கும், திருநெல்வேலிக்கும் எதிரி இல்லா சுதந்திரம் பெற்ற ஆட்சித் தலைவர்கள் பறைசாற்றினர். ஆற்றல்மிக்க அவர்கள், பிதாமகரான அரியநாயக முதலியார் தலைமையில் முன்பிருந்த பாண்டிய மன்னர் கீழ் இருந்த குறுநில ஆட்சிப் பரப்புகளை பிரிவினை செய்து 72 பாளையங்களாக மாற்றி அமைத்தனர். அப்போது பிறந்த பாளையம்தான் சிங்கம்பட்டி.

விஸ்வநாதநாயக்கர் மதுரையைச் சுற்றி ஒரு பிரமாண்டமான கோட்டையை நிர்மாணித்தார். அதில் 72 கொத்தளங்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் 21 கொத்தளங்கள் சிங்கம்பட்டி பாளையக்காரர் தலைமையின் கீழ் வைக்கப்பட்டன. சிங்கம்பட்டி பாளையக்காரரின் இணையற்ற தீரபராக்கிரமத்தை கண்ட விஸ்வநாதநாயக்கர் அவரை தென்நாட்டுப்புலி என பாராட்டினார். பின்பு 1802-ம் ஆண்டு சென்னை ராஜ்ய கவர்னர் ராபர்ட் கிளைவ், பாளையங்கள் அனைத்தையும் ஜமீன்களாக மாற்றி அமைத்தார்.

வனப்பிரதேசத்தில் உள்ள பாணத்தீர்த்த அருவிக்கு சிங்கம்பட்டி சமஸ்தான குலகுரு சிருங்கேரி சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ நரசிம்ம பாரதி தீர்த்தமாட வந்திருந்தபோது, தீர்த்தபதி என்னும் பட்டத்தை சிங்கம்பட்டி குறுநில மன்னருக்கு வழங்கினார்.
சிங்கம்பட்டி ஜமீன்தார் திவான்பகதூர் தென்னாட்டுப்புலி நல்லக்குத்தி சிவசுப்பிரமணிய தீர்த்தபதி 29-வது தலைமுறையில் தோன்றியவர். தயாளகுணம் கொண்ட இவர் அம்பாசமுத்திரத்தில் அரசு பொது மருத்துவமனை, அரசுப் பள்ளி கட்டுவதற்கு நிலம் கொடுத்ததால், இவ்விரண்டும் தீர்த்தபதி என அவரது பெயரால் தற்போதும் அழைக்கப்பட்டு வருகிறது.

சிங்கம்பட்டி ஜமீன்தார் 30-வது பட்டமான சங்கர சிவசுப்பிரமணிய தீர்த்தபதி சென்னை கல்லூரியில் படித்து வரும்போது ஒரு கொலைக் குற்றவாளியாக சட்டத்தின் பிடியில் சிக்கினார். இந்த வழக்கில் பெரும் விரயம் ஏற்பட்டது. அது ஜமீன் வருமானங்களைப் பாதித்தது. கொண்ட கடனை சரி செய்ய அவரின் பிதா, மலை நாட்டில் உள்ள 8,000 ஏக்கர் நிலத்தை பிரிட்டிஷார் நடத்தி வந்த கம்பெனிக்கு தேயிலை பயிரிட குத்தகைக்குக் கொடுத்தார். இவ்வாறுதான் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் உருவானது.

சிங்கம்பட்டியின் 31-வது பட்டம் பெற்றவர் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. இவர்தான் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கடைசி ஜமீன்தார். இவருக்கு மூன்றரை வயதில் முடி சூட்டப்பட்டது. இவருக்கு இப்போது வயது 80. முருகதாஸ் தீர்த்தபதிக்கு மகன்கள் மகேஸ்வரன், சங்கராத் பஜன், மகள்கள் அபராஜிதா, சுபத்ரா, மௌலிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

1952-ம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரை மேற்குத் தொடர்ச்சி மலையில் 74,000 ஏக்கர் நிலங்கள் ஜமீன் ஆளுகையில் இருந்து வந்தது. மேலும், சிங்கம்பட்டி ஜமீன் ஆளுகையில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில், அகமகாதேவர் கோயில், முத்தாரம்மன் கோயில், வல்லப கணபதி கோயில், வெயில் உகந்த அம்மன் கோயில், முப்புடாதி அம்மன் கோயில், சுப்பிரமணியசாமி கோயில், ஊத்துக்குளி சாஸ்தா ஆகிய 8 கோயில்கள் உள்ளன.

இக்கோயில்களுக்கு முருகதாஸ் தீர்த்தபதி பரம்பரை அறங்காவலராக இருந்து நிர்வகித்து வருகிறார்.
காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி பக்தர்களுக்கு ராஜ உடையில் காட்சியளிப்பார். தொடர்ந்து 74 வருடங்களாக சொரிமுத்து அய்யனார் கோயிலில் இவர் ராஜஉடையில் காட்சி அளித்துள்ளார்.
சிங்கம்பட்டி ஜமீன், பிரிட்டிஷ் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 ஆயிரம் கிஸ்தி செலுத்தி வந்துள்ளனர்.

ஜமீன்சிங்கம்பட்டியில் சிங்கம்பட்டி அரண்மனை 5 ஏக்கரில் அமையப்பெற்றுள்ளது. சிங்கம்பட்டி ஜமீனில் 1,000 குதிரைகளை வைத்துப் பராமரித்து வந்துள்ளனர். 5 தந்தப் பல்லக்குகள் இருந்தன. ஜமீன்சிங்கம்பட்டி அரண்மனையில் கிங் ஜார்ஜ் தொடக்கப் பள்ளி இப்போதும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. தற்போது விவசாயம் செய்து வரும் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி ஆயுள் காப்பீட்டு முகவராகவும் உள்ளார்.

அரண்மனை அருங்காட்சியகத்தில் திவான் பகதூர் பயன்படுத்தி வந்த உடைகள், குறுநில மன்னர்கள் எழுதிய கடிதங்கள், அவர்கள் பயன்படுத்தி வந்த பொருள்கள் இடம்பெற்றுள்ளன.

நன்றி: தினமணி